Monday, April 29, 2013

செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்


மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி


பொ
ருளே வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு தன்னலம் ஒன்றே இலக்கு   என்றாவதில் வியப்பென்ன இருக்க முடியும்?

இங்கே தனிமனித வாழ்விலும் சமூக வாழ்க்கையிலும் மனசாட்சிக்கோ பண்பாட்டிற்கோ அறவே இடமில்லை. தனிமனிதன் தன் நலத்தைப் பேணுவதிலும் எவ்வழியிலாவது வாழ்க்கையை அனுபவிப்பதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றான்.

பொதுவாழ்வோ முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசுபட்டுக் கிடக்கிறது. பொதுவாழ்க்கையின் அடிப்படையே பொதுநலன்தான். ஆனால், இன்றைய சமூக அவலங்களை நோக்கும்போது தன்னலத்தின் தன்னிகரற்ற போட்டிக் களமாகப் பொதுவாழ்வு மாறிவிட்டிருக்கிறது.

இதற்கிடையில், சுயநலத்தைக் காப்பதிலும் வளர்ப்பதிலும் அறிவியல் முன்னேற்றமும் புதிய கண்டுபிடிப்புகளும் பெரும்பங்காற்றிவருகின்றன. தொலைக்காட்சியும் இணையதளமும் குடும்ப உறுப்பினர்களிடையே பெரிய தடுப்புச் சுவரை ஏற்படுத்தி, ஒட்டாமல் செய்துவிட்டன. ஒவ்வொருவரும் தனித்தனி உலகத்தில் சஞ்சரிப்பதால் அடுத்தவரைப் பற்றிக் கவலைப்பட யாருக்கும் நேரமில்லை.

கைப்பேசி வந்ததிலிருந்து சாலையில் செல்லும் மனிதனுக்கு, எதிரில் வருபவனைக் கண்டு முகம் மலரவோ முகமன் கூறவோ தோன்றுவதில்லை. உடன் இருப்பவனை மறந்து, எங்கோ இருப்பவனுடன், அல்லது இருப்பவளுடன் கதைப்பதற்கே அவனுக்கு, அல்லது அவளுக்கு நேரம் போதவில்லை.

இந்த லட்சணத்தில் இறையுணர்வு, இறைவன் எழுதிய விதியைப் பொருந்திக்கொள்ளல், உள்ளதைக் கொண்டு போதுமாக்கல், இருப்பதைவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படாமை, நாம் வாழ பிறர் வாழ்க்கையைக் கெடுக்காமலிருத்தல் என்பன போன்ற உயர்பண்புகளுக்கு எங்கே இடமிருக்கப்போகிறது!

குழந்தைச் செல்வம்


குழந்தைப் பாக்கியம் என்பது, உண்மையிலேயே இறைவன் வழங்கும் மாபெரும் கொடை என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. கோடி கோடியாகப் பணம் இருந்தும் சொத்துப்பத்துகள் இருந்தும் எல்லாம் யாருக்காக என்ற கேள்வி எழும்போது, குழந்தைச் செல்வம்தான் பதிலாக வந்து நிற்கும்.

சிலர் ஆண் குழந்தையை விரும்புவர்; அவர்களுக்குப் பெண்குழந்தையே திரும்பத் திரும்பப் பிறக்கும். சிலர் பெண் குழந்தைக்காக ஏங்குவதுண்டு; ஆனால், ஆண் குழந்தைகளே அவர்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு ஆணும் பெண்ணும் கலந்து பிறக்கும். அவ்வாறுதான், சிலருக்குக் குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விடும். எல்லாம் இறைவனின் நாட்டம்; அவனது எழுத்து.

அல்லாஹ்வுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உண்டு. தான் நாடுவதை அவன் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண் குழந்தைகளை (மட்டும்) அருள்கின்றான்; தான் நாடுவோருக்கு ஆண் குழந்தைகளை (மட்டும்) அருள்கின்றான். அல்லது ஆண்களையும் பெண்களையும் கலந்து கொடுக்கின்றான். தான் நாடுவோரை மலடியாக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்; பேராற்றல் மிக்கவன் (42:49,50) -என்கிறது திருக்குர்ஆன்.

இந்தத் தத்துவத்தைப் பொருந்தியே முன்னோர்கள் வாழ்ந்தார்கள்; அதிலும் திருப்தியோடுதான் வாழ்ந்தார்கள். அவர்களது வாழ்க்கையில் வசதிப் பற்றாக்குறை இருந்திருக்கலாமே ஒழிய, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருந்ததில்லை. காரணம், வாழ்வின் எதார்த்தத்தை அவர்கள் புரிந்திருந்தார்கள். இன்று வசதிகளுக்குக் குறைவில்லை; ஆனால், நிம்மதிதான் காசு கொடுத்தாலும் கிடைப்பதில்லை. காரணம், வாழ்க்கையின் நிஜத்தை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

மேற்கண்ட வசனத்தின்படி, நபி லூத் (அலை) அவர்களுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஆண் பிள்ளைகள் மட்டுமே பிறந்தார்கள். இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஆணும் பெண்ணும் பிறந்தனர். நபி யஹ்யா (அலை), ஈசா (அலை) ஆகியோருக்குக் குழந்தைகளே பிறக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆக, இவ்வகையில் மனிதர்கள் நான்கு வகைப்படுவர். இந்த நான்கு வகைகளுக்கும் நபிமார்களிலேயே அல்லாஹ் உதாரணங்களை ஏற்படுத்தியிருந்ததுதான் முக்கியமானது.

அவ்வாறே, படைக்கப்பட்ட விதத்திலும் மனிதர்கள் நான்கு வகைப்படுவர்.

1. ஆதித்தூதரும் ஆதி மனிதருமான ஆதம் (அலை) அவர்கள் ஆண் மற்றும் பெண்ணின் துணையின்றி, மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள்.

2. அன்னாரின் துணைவியார் ஹவ்வா (அலை) அவர்கள் ஆண் துணைகொண்டு மட்டுமே -ஆதமின் விலா எலும்பிலிருந்து- படைக்கப்பட்டார்கள்.

3. நபி ஈசா (அலை) அவர்கள் ஆண் துணையின்றி மர்யம் (அலை) அவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்தார்கள்.

4. மற்றெல்லாரும் ஆண் மற்றும் பெண் துணையுடன் பிறந்தவர்கள் ஆவர்.

இவர்கள், பெற்றோர் வழியில் நான்கு வகை மனிதர்கள் என்றால், முன்பு கூறப்பட்டவர்கள் பிள்ளை வழியில் நான்கு வகை மனிதர்கள் ஆவர். இவையெல்லாம் வல்ல இறைவனின் வகைவகையான படைப்பாற்றலுக்குச் சான்றுகளாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்)

மலட்டுத் தன்மை


மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்குக் குழந்தைகளும் குட்டிகளும் பிறப்பது எப்படி இயல்பான ஒன்றோ, அப்படியே குழந்தைப் பேறு இல்லாத மலடிகளாக மனிதர்கள் இருப்பதும் இயல்பான ஒன்றுதான் என்பது இத்திருவசனத்திலிருந்து உறுதியாகிறது. எனவே இது, குறைகூறும் அளவுக்கான பெரிய குறைபாடு அல்ல. குழந்தை பேறற்றவர்களை, இருவழி உறவினர்களும் மனம் புண்படும்படி பேசி நோகச்செய்யக் கூடாது.

பொதுவாக எட்டில் ஒரு ஜோடி -அதாவது 12.5 விழுக்காட்டினர்- மலடியாக இருக்க வாய்ப்பு உண்டு என்கிறது ஒரு கணக்கு. இவர்களில் 50 முதல் 60 விழுக்காடு பெண்களும் 30 முதல் 40 விழுக்காடு ஆண்களும் பிள்ளைப்பேறில்லாமைக்குக் காரணம். 10 விழுக்காடு காரணம் கண்டுபிடிக்க முடியாத அம்சங்களால் மலட்டுத்தனம் ஏற்படுகிறதாம்!

குறைபாடுகள்


குழந்தைப் பேறின்மைக்குப் பெண்களிடம் காணப்படும் குறைபாடுகள் மூன்று:

1. சினைமுட்டை வெளியாவதில், அல்லது ஹார்மோன்களில் காணப்படும் பிரச்சினைகள்.

2. அண்டக் குழாய் (Ovary) குறைபாடுகள்; சினைமுட்டைகளையும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்யும் உறுப்பே அண்டகம், அல்லது அண்டக்குழாய் எனப்படுகிறது.

3. விந்தணுவைச் செயலிழக்கச் செய்கின்ற வேதியியல் (கெமிக்கல்) குணமேதும் பெண்கள் உடலில் இருத்தல்.

அவ்வாறே ஆண்களில் காணப்படும் குறைபாடுகளும் மூன்று:

1. ஆண்மைக் குறைவு (Impotence).

2. ஆண்களின் ஒவ்வொரு விந்துத் துளியிலும் 60 மில்லியன் உயிரணுக்கள் இயல்பாக இருக்கும். இந்த விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது.

3. விந்துயிரணு ஒவ்வொன்றும் பேரிக்காயின் தோற்றத்தில் தலை, கழுத்து, உடம்பு, சாட்டை போன்ற வால் ஆகியவை கொண்ட உயிரி ஆகும். முன்னோக்கி மிக வேகமாக நகரும் இதனை நுண்ணோக்கி (Microscope) மூலம் காணலாம். இந்த உயிரணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் கோளாறும் மலட்டுத் தன்மைக்குக் காரணமாகலாம்.

அறிவியல் உலகம் சொல்லாமல் மறைக்கின்ற ஒரு காரணமும் குழந்தைப் பேறின்மைக்கு உண்டு. அதுதான், திருமணத்திற்குமுன் ஆண்கள் விந்தை வீணாக்குவது. சுய பாலின்பம், கெட்ட கனவு ஆகியவற்றால் விந்தை வீணாக வெளியேற்றிப் பழகிவிட்ட ஒருவனுக்கு, தாம்பத்திய உறவில் நாட்டம் குறையும். அப்படியே தாம்பத்திய உறவில் விந்து வெளிப்பட்டாலும் அதிலுள்ள உயிரணுக்களில் வீரியம் இருக்காது.

அடுத்து குழந்தையின்மைக்கு இருவருக்கும் பொதுவான காரணங்கள் எனச் சிலவற்றைக் கூறலாம்:

1. ஆணுக்கோ பெண்ணுக்கோ, விந்தணு பயணிக்கும் பாதையில் அடைப்பு இருக்கலாம். ஒன்று, ஆணிலிருந்து விந்தணு வெளியேறுவதில் தடங்கல் ஏற்படலாம். அல்லது வெளியேறியபின் பெண்ணின் கருமுட்டையுடன் இணைவதில் பிரச்சினை ஏற்படலாம். ஆனால், இந்த அடைப்பை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த இடமுண்டு.

2. உணர்வு மற்றும் மனரீதியிலான விஷயங்கள் காரணமாக இருக்கலாம். கணவனுக்கு மனைவியுடன் சேர்வதில், அல்லது மனைவிக்குக் கணவன் அருகில் வந்துவிட்டாலே, அல்லது இருவருக்குமே அந்த உறவில் மனரீதியான தடைகள் இருக்க வாய்ப்பு உண்டு. இதற்குக் கலந்தாய்வு ஆலோசனைகள் (கவுன்சிலிங்) மூலம் தீர்வுகாணலாம்.

3. ஆண், அல்லது பெண், அல்லது இருவருமே புகைப்பழக்கத்திற்கோ போதைப் பழக்கத்திற்கோ அடிமையாக இருத்தல்.

4. ஆண் பெண்ணை, அல்லது பெண் ஆணை அடிக்கடி அதிக இச்சையுடன் பார்ப்பது. சினிமா, தொலைக்காட்சி, ஆபாச புத்தகம், நேரில் பார்த்தல் ஆகியவற்றால் உணர்ச்சியை இழத்தல்.

5. மரபு வழி காரணங்களும் குழந்தைப் பேறின்மைக்குக் காரணமாக இருக்கலாம்.

6. புதுவகை உணவுகள். இவற்றில் கலக்கும் பொடி வகைகள், வேதியியல் பொருட்கள் உயிரணுவையோ கருமுட்டையையோ பெரிதளவில் பாதிக்கலாம்.

7. கடின வேலைகள். இவற்றால் உடம்பின் ஆற்றல்களை இழந்து, சத்துகள் குறைந்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.

தீர்வுகள்


குழந்தைப் பேறின்மைக்கு இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இரண்டு தீர்வுகளைக் கூற முடியும்:

1. உடல் ரீதியிலான குறைகள் இருக்குமானால், அவற்றைக் களைய மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளைத் தாராளமாக மேற்கொள்ளலாம்.

2. மனரீதியிலான குறைகள் இருந்தால், உளவியல் சிகிச்சை முறைகள், கவுன்சிலிங் ஆலோசனைகள் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

3. முடியாதபோது தத்து எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும், வளர்ப்புக் குழந்தை சட்டப்படி சொந்தக் குழந்தை ஆக முடியாது; வளர்ப்புத்தாய் அல்லது தந்தையின் சொத்திலிருந்து வாரிசுரிமைச் சட்டப்படி பாகப்பிரிவினை கோர முடியாது; அவர்களுடைய உறவுகள் இவனுக்கு முறைப்படியான உறவுகளாக முடியாது.

செயற்கைக் கருத்தரிப்பு


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷியாவில் கால்நடைகளின் இனப்பெருக்கத்தை அதிகமாக்கிக் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நடைமுறையே செயற்கைக் கருத்தரிப்பு (Artificial Insemination) முறையாகும்.

பின்னர் இது மனிதர்களுக்கும் பரவியது. செயற்கைக் கருத்தரிப்பு முறையோ சோதனைக் குழாய் (Test Tube) குழந்தை முறையோ மேலைநாடுகளில் உள்ள அளவுக்கு முஸ்லிம் உலகில் இல்லை.

இதற்குக் காரணம், ஒரு முஸ்லிம் நான்கு மனைவியர்வரை மணமுடிக்க இஸ்லாத்தில் அனுமதி இருப்பதுதான். ஒரு மனைவிமூலம் குழந்தைப் பாக்கியம் கிடைக்காதபோது இன்னொரு பெண்ணை மணமுடித்துக் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. குழந்தைப் பேறின்மைக்கு 60 விழுக்காடு காரணம் பெண்ணிடம் உள்ள குறைபாடே என முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

ஏழு வகைகள்


செயற்கைக் கருத்தரிப்புக்கு ஏழு முறைகள் அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது முறை மார்க்கத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் முறைக்குச் சில நிபந்தனைகளுடன் அனுமதி உண்டு.

இதர ஐந்து முறைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது; அவை தடை செய்யப்பட்டவை ஆகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

1. கணவனின் விந்தை எடுத்து, மனைவியின் புணர்புழையில், அல்லது கருப்பையின் கழுத்துப் பகுதியில் வைத்து வளரச்செய்யும் முறை.

கணவனின் விந்திலுள்ள உயிரணு மனைவியின் கருமுட்டையுடன் இணைந்து, கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொண்டு கருத்தரிப்பு ஏற்படும். விந்து உயிரணு இயற்கையாகக் கருப்பைக்குள் சென்று கருமுட்டையுடன் இணைவதில் தடை ஏற்படுவதால் குழந்தை பெற முடியாத தம்பதியருக்கு, இந்தச் செயற்கை முறைமூலம் குழந்தை உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

இதில், தம்பதியரல்லாத மற்றவர்களுக்குக் குழந்தை பிறப்பில் எந்தப் பங்கும் இல்லை. கருத்தரிப்புக்கு வேண்டிய விந்தணுவும் கருமுட்டையும தம்பதியருக்குரியதே. இருப்பினும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இம்முறையையும் கையாள வேண்டும்.

2. கணவனின் விந்து, மனைவியின் கருமுட்டை ஆகிய இரண்டையும் தனித்தனியே எடுத்து, ஐ.வி.எஃப் சோதனைக் குழாயில் வைத்துக் கருவுறச் செய்தல். ஒருபுறம் அடைப்பும் குறைந்த சுற்றளவும் கொண்ட கண்ணாடிக் குழாயே சோதனைக் குழாய் எனப்படுகிறது.

பின்னர் உரிய காலத்தில், குழாயிலிருந்து எடுத்து, மனைவியின் கருப்பையில் செலுத்தும் முறையே இது. இதிலும், கருப்பையின் சுவரைப் பிடித்துக்கொண்டு கரு வளரும். இதற்கு மூன்று லட்சம் ரூபாய்வரை செலவாகுமாம்! ஐந்து சதவீதம் பேரே இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்கின்றனர். விந்தணுவும் கருமுட்டையும் இணைந்த பிறகு கருவை வளர்க்கும் சக்தி கருப்பைக்கு இல்லாதபோது, இம்முறை உதவலாம்.

இந்த முறையிலும், கருவூட்டலில் தம்பதியர் தவிர மற்றவர்களின் பங்களிப்பு இல்லை. தந்தையின் விந்தணுவும் தாயின் கருமுட்டையுமே கருத்தரிக்க அடிகோலுகிறது. எனவே, பெற்றோர்-பிள்ளை உறவுமுறை இதிலும் ஏற்படும்.

இருப்பினும், சோதனைக் குழாயில் வைத்து விந்தணுவையும் கருமுட்டையையும் வளர்க்கும் வேளையில், குழாய் மாறிவிடக் கூடாது; வேறு யாருடைய விந்தணுவோ கருமுட்டையோ இந்தத் தாயின் கருப்பையில் செலுத்தப்படுகின்ற தவறு நடந்துவிடக் கூடாது. இதில் எச்சரிக்கை தேவை.

இந்த இரு வகைகளிலும் வாடகைத் தாய்க்கு வேலை இல்லை; சொந்தத் தாயே குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். விதையும் சொந்தப் பெற்றோருடையதே. எனவே, இரு முறைகளும் செல்லும் என்று மார்க்க வல்லுநர்கள் ஃபத்வா அளித்துள்ளனர்.

வாடகைத் தாய்கள்


3. கணவனின் முதல் மனைவிக்காக, அவனுடைய விந்தை எடுத்து இரண்டாவது மனைவியின் கருப்பையில் செலுத்தி கருவூட்டும் முறை.

இக்கருவில் உண்டாகும் குழந்தை இரண்டாவது மனைவிக்குரிய குழந்தையாகுமே தவிர, முதல் மனைவியின் குழந்தையாக ஆக முடியாது. ஆக, இதில் தாய் வேறு என்பது குறிப்பிடத் தக்கது. கணவனின் இன்னொரு மனைவியாக இருந்து, வாடகைப் பணம் வாங்காவிட்டாலும் அவளும் வாடகைத் தாய்தான். இம்முறை கூடாது.

4. கணவனின் விந்தை எடுத்து, மற்றொருவனுடைய மனைவியின் கருப்பையில் செலுத்தி கருவூட்டல். இது அப்பட்டமான வாடகைத் தாய் முறையாகும். கணவன் அப்பெண்ணுடன் உறவு கொள்ளாவிட்டாலும், தவறான வழியில் பிறந்த குழந்தையைப் போன்றே இது கருதப்படும்.

5. கணவனின் விந்தையும் வேறொரு பெண்ணின் கருமுட்டையையும் எடுத்து, சோதனைக் குழாயில கருவுறச்செய்து, பின்னர் அதை மனைவியின் கருப்பையில் வைப்பது.

இந்த முறையில், அந்த வேறொரு பெண்ணே குழந்தையின் தாய் ஆவாள். மனைவி பெற்றெடுத்தாலும், கரு அவளுக்குரியதன்று. எனவே, அவள் வாடகைத் தாய்போல் செயல்பட்டிருக்கிறாள். இம்முறையும் கூடாது.

6. கணவனின் விந்தையும் வேறொரு பெண்ணின் கருமுட்டையையும் எடுத்துச் சோதனைக் குழாயில் கருவூட்டி, யாரோ ஒரு பெண்ணின் கருப்பையில் விதைப்பது.

இதில், மனைவிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவளுடைய கணவனின் விந்தணுவாக இருந்தாலும், அவன் யாருடனோ தவறாக உறவுகொண்டு பிறந்த குழந்தையைப் போன்றதே இது. ஆக, தாயும் வாடகை; சுமந்தவளும் வாடகை. பலநேரங்களில் அந்த வாடகைத் தாய்கள் யாரென்றே தெரியாது.

7. கணவனின் விந்தையும் மனைவியின் கருமுட்டையையும் எடுத்துச் சோதனைக் குழாயில் வளர்த்து, வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தும் முறை.

இதில், பெற்றெடுப்பவள் அந்நியப் பெண். அவள் யாரென்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், குழந்தைக்குத் தாய் நான்தான் என்று அவள் உரிமை கொண்டாடக்கூடும்.

இந்தப் பிந்திய ஐந்து வகைகளிலும், ஒரே தம்பதியரின் விதையிலிருந்து கரு உருவாகவில்லை; அல்லது சுமந்து பெற்றவள் அந்நியப் பெண்ணாக இருக்கிறாள். எனவே, இவை அனைத்தும் செல்லத் தக்கவை அல்ல.

இந்திய வாடகைத் தாய்கள்


இந்தியாவில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் குழந்தைகள் வாடகைத் தாய்களால் பிறக்கின்றனவாம்! இதன்மூலம், ஆண்டுக்கு 200 கோடி டாலர்கள் வருமானம் கிடைக்கிறதாம்! இது ஒரு தொழிலாகவே நடக்கிறது.

இந்திய வாடகைத் தாய்களை இரு வகைப்படுத்தலாம். 1. கருமுட்டை, விந்து இரண்டையுமே வெளியிலிருந்து பெற்று, செயற்கையாக இணையவைத்து, கருவை வாடகைத் தாயின் கருப்பையில் வளரச் செய்தல். குழந்தைக்கும் வாடகைத் தாய்க்கும் எந்தவிதமான இரத்த உறவும் இருக்காது.

2. கருமுட்டையை வாடகைக்கு வாங்கி, கணவனின் விந்துடன் இணைத்துக் கருவுறச் செய்யும் முறை.

இதற்காகச் செயற்கை கருவூட்டல் கிளினிக்கள் (IVF) உள்ளன. வாடகைத் தாயின் உயிருக்கோ உடலுக்கோ எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இந்தச் செயற்கை முறைகளில் குழந்தைக்கே முக்கியத்துவம். லட்சக்கணக்கான டாலர்கள் அதற்காக முதலீடு செய்யப்பட்டிருப்பதே காரணம்.

பெரும்பாலும் மேலைநாடுகளின் தம்பதியினருக்காகவே குழந்தை பெற்றுக் கொடுக்கின்றனர். குழந்தை உண்டாகி, பிரசவிப்பதில் உள்ள அவதிகளை அனுபவிக்க மேலைநாட்டினர் தயாராக இல்லை. செல்லப் பிராணிகளைப் போன்றே பிள்ளைகளையும் காசு கொடுத்து வாங்கவே விரும்புகிறார்கள்.

மிருகங்கள் எவ்வளவோ பரவாயில்லை. கருத்தரித்து, ஈன்று, சிரமப்பட்டுக் கண்ணுங்கருத்துமாகக் குட்டிகளை வளர்க்கின்றன.

வாடகைத் தாய் பாதிக்கப்பட்டால், வாடகைக்கு அமர்த்திய பெற்றோர், அவர்களுக்குத் தரகர்களாகச் செயல்பட்டவர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரெல்லாம் சாமர்த்தியமாகத் தப்பிவிடுகின்றனர்.

சுமந்து பெற்ற தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு, பெற்றுக்கொடுத்ததோடு முடிந்துவிடும். இதையெல்லாம்விடப் பெருங்கொடுமை ஒன்று உண்டு. வாடகைக்கு விந்து கொடுத்தவன் யார்? கருமுட்டை வழங்கியவள் யார்? வாடகைக்காக வயிற்றைக் கொடுத்தவள் யார்? எதுவுமே தெரியாது. இரகசியம் (?) காக்கப்படும்.

இதனால், கருமுட்டை கொடுத்தவளின் சொந்த மகளை, கருமுட்டையில் பிறந்த வாடகை மகனே காதலித்துத் திருமணம் செய்துகொள்கின்ற அவலம் ஏற்படலாம். விந்து கொடுத்தவனின் சொந்த மகன், அவன் தானம் செய்த விந்தின் மூலம் பிறந்த மகளைத் திருமணம் செய்துகொள்கின்ற கொடுமையும் அரங்கேறலாம்.

வாடகைத் தாயின் துயரங்கள்


கரு கலையாமல் இருக்க, ஏராளமான ஹார்மோன் ஊசிகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதுண்டு. இதனால் வாடகைத் தாயின் உடல் நலம் பாதிக்கப்படும்; மாதவிடாய் சுழற்சிமுறை சீர்குலையும்.

வாடகைக்கு எடுத்தவரின் வசதிக்கேற்பவே சிசேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படும். வாடகைத் தாயின் உடல் நிலையோ வேறு சூழல்களோ கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதனால் வாழ்நாள் முழுக்க அவளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒரே தடவையில் நான்குக்கு மேற்பட்ட கருக்கள் வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கப்படும். கருக்களில் சில கலைந்துபோனாலும் ஒன்றாவது தப்புமல்லவா? பிறகு தேவைக்கேற்ப கருக் குறைப்பு செய்யும் தவறும் நடக்கும்.

சுருங்கக் கூறின், பணம் சம்பாதிக்க கருப்பை ஒரு மூலதனம். தாய்மை என்ற தியாகமே இங்கு விலைபேசப்படுகிறது. காசுக்காக மனிதன் எதையும் செய்யத் துணிந்துவிட்டான். பெரும்பாலும் அப்பாவிப் பெண்களே இக்கொடுமைக்குப் பலியாகின்றனர். இதன் பின்னணியில் செயல்படும் முகவர்கள், மருத்துவர்கள், வாடகைத் தாயின் பொறுப்பாளர்கள், இந்திய அரசாங்கம் என யாருக்கும் மனசாட்சியே கிடையாதா?

இஸ்லாத்தின் தூய்மை


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தெரிந்துகொண்டே தம்மைத் தம் தந்தையல்லாத வேறொருவருடன் இணைத்து (நான் அவருடைய மகன்தான் என்று) வாதிடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகும். (புகாரீ)

தன் தந்தை அல்லாத ஒருவரைத் தன் தந்தை என வாதிடுபவனுக்கு, அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான். (முஸ்லிம்)

ஒரு குழந்தை ஒரு பெண்ணிடம் பால் அருந்துவதன் மூலம், பிறவியால் உண்டாகும் உறவுமுறைகள் அனைத்தும் உண்டாகும் என்பது இஸ்லாத்தின் விதி. அவ்வாறிருக்கும்போது, விந்து, கருமுட்டை, கருவை சுமத்தல் போன்ற குழந்தை பிறப்புக்கு அடிப்படையான அம்சங்களால் அந்த உறவு ஏற்படத்தானே செய்யும்?

வாடகைத் தாய் முறையால், அண்ணன் தன் தங்கையை, மகனே தாயை, தந்தையே மகளை மணக்கும் ஆபத்து உண்டு. இந்த அசிங்கத்திற்கு இஸ்லாத்திலும் அனுமதியில்லை; மனித நாகரிகமும் இதை ஏற்காது.

(நன்றி: திருவல்லிக்கேணி வட்டார ஜமாஅத்துல் உலமா
மாநாட்டு மலர்
– 2013)

No comments:

Post a Comment